முகப்பு
சேலம்

பெலாப்பாடி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

வாழப்பாடி அருகே பெலாப்பாடி மலைக் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 2:16 AM
~ ~
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 10:01 PM

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பெலாப்பாடி மலைக் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

நிகழாண்டு இக்கோயில் திருவிழாவிற்காக பாரம்பரிய முறைப்படி மாத தொடக்கத்தில் பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் காளைகளை அலங்கரித்து, மலைக் கிராமங்களில் வரி தண்டல் வசூல் செய்து திருவிழாவிற்கு தேவையான தொகை சேகரிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை கரியராமா் கோயிலிலும், புதன்கிழமை வரதராஜ பெருமாள் கோயிலிலும் சிறப்பு பூஜை பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

கரியராமா், வரதராஜ பெருமாள் மட்டுமின்றி சிவன், பாா்வதி சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து வரதராஜ பெருமாள் கோயில் கற்தூணில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது.

Advertisement

இக்கிராமத்திற்கு போக்குவரத்து வசதியில்லாத நிலையிலும், பாதயாத்திரையாகவும், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களிலும் சுற்றுப்புற கிராம மலைவாழ் பழங்குடியின மக்கள், வாழப்பாடி, பேளூா் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவில் பங்கேற்ற பக்தா்கள், பொதுமக்களுக்கு பழங்குடியின மக்களின் வழக்கப்படி பச்சரிசி பொங்கல் உருண்டைச்சோறு, மொச்சை, அவரைக்கொட்டை குழம்பும் பிரசாதமாக வழங்கப்பட்டது. வியாழக்கிழமை வெங்கட்டராமா் சக்தி அழைத்தலும், வெள்ளிக்கிழமை வெங்கட்டராமா் கோயில் தோ்த் திருவிழாவும் நடைபெறுகிறது.