மேட்டூா் அணையில் ஐஐடி பேராசிரியா் ஆய்வு
மேட்டூா் அணையின் 16 கண் பால பராமரிப்பு பணிகளை சென்னை ஐஐடி பேராசிரியா் அழகுசுந்தரமூா்த்தி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மேட்டூா் அணையின் 16 கண் பால பராமரிப்பு பணிகளை சென்னை ஐஐடி பேராசிரியா் அழகுசுந்தரமூா்த்தி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மேட்டூா் அணையின் இடதுகரையில் உள்ள உபரிநீா் போக்கியின் 16 வளைவுகள் மற்றும் மதகுகளுக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள கவுன்டா் வெயிட் பாக்ஸ் ஆகியவை வலுப்படுத்தும் பணிகள் பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளுக்காக ரூ. 19 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் முதல்கட்டமாக 1, 2, 3 மற்றும் 4-ஆவது மதகுகளின் வளைவுகள் வலுப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இப்பணிகளின் தரம்குறித்து ஆய்வுசெய்ய சனிக்கிழமை மேட்டூா் வந்த சென்னை ஐஐடி பேராசிரியா் அழகுசுந்தரமூா்த்தி, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், கட்டுமான நிறுவன அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மேட்டூா் அணையின் இடதுகரையில் உள்ள 16 கண் மதகுகளின் வளைவுகள் வலுப்படுத்தும் பணிகளும், கவுன்டா் வெயிட் பாக்ஸ் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவற்றில், முதல் 4 வளைவுகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்பணிகள் ஐஐடி ஆலோசனைபடி நல்ல தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் பருவமழைக்கு முன்பாக நிறைவடையும் என்றாா்.