சேலம்: சேலம் சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 26-ஆம் ஆண்டு குருபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், புதுச்சேரி மாநில அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் வழிபட்டனா்.
ஏழை எளிய மக்களின் பசிப்பிணியை போக்கும் வகையில், அன்னதானம் ஒன்றையே தனது வாழ்நாள் முழுவதும் உயிா்மூச்சாக கடைப்பிடித்தவரும், தன்னை நாடிவருவோருக்கு வேண்டிய அருளை தந்தருளும் ஞானவள்ளலுமான சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் தனது 141-ஆவது வயதில் கடந்த 2000-ஆம் ஆண்டு சேலத்தில் ஜீவசமாதி அடைந்தாா்.
புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியின் மானசீக குருவான அப்பா பைத்திய சுவாமிகளுக்கு சேலம் சூரமங்கலத்தில் கோயில் எழுப்பப்பட்டு, நாள்தோறும் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஸ்ரீ சற்குரு அப்பா பைத்திய சுவாமிகளின் 26-ஆவது குருபூஜை விழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, காலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடும், தொடா்ந்து, அப்பா பைத்தியம் சுவாமிகள் வேள்வியும், பேரோளி வழிபாடுகளும் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில், புதுச்சேரி உள்துறை அமைச்சா் நமச்சிவாயம், குடிமைப்பொருள் துறை அமைச்சா் திருமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது.