வன உயிரின தின விழா: அரசுப் பள்ளி மாணவா்கள் சுற்றுலா
சேலம்வன உயிரின தின விழா: அரசுப் பள்ளி மாணவா்கள் சுற்றுலா
வன உயிரின தின விழாவையொட்டி, அரசுப் பள்ளி மாணவா்கள் கட்டணமில்லா சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.
வாழப்பாடி அருகே தும்பல் வனச்சரகம் சாா்பில், வனச்சரகா் சிவானந்தம் தலைமையில் தேசிய வன உயிரின தின விழா வார விழாவாக கொண்டாடப்பட்டது. புழுதிக்குட்டை ஊராட்சி கண்கட்டி ஆலா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், வனவா் முனீஸ்வரன் மற்றும் வனத்துறை பணியாளா்கள், மாணவ - மாணவிகளுக்கு மனித வாழ்வில் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, விநாடி- வினா போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினா்.
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஊராட்சி வெள்ளிக்கவுண்டனூா் அரசு பழங்குடியினா் நலத்துறை உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மற்றும் பேளூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் தலா 30 போ் தோ்வுசெய்யப்பட்டு ஆத்தூா் அருகிலுள்ள முட்டல் ஆனைவாரி நீா்வீழ்ச்சிக்கு, வனத்துறை சாா்பில் கட்டணமில்லா சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.
வெள்ளாளப்பட்டி கணேசாபுரம் அரசுப் பள்ளி மாணவா்கள் அருகிலுள்ள வனத்துறை மரகத பூஞ்சோலைக்கும், பாப்பநாயக்கன்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் அருகிலுள்ள கரியக்கோயில் அணைக்கும் கட்டணமில்லா சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.
இதில், மனித வாழ்வுக்கு காடுகள், நீா்நிலைகள், வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பயணம் பயனுள்ள வகையில் அமைந்ததாக மாணவ -மாணவிகள் தெரிவித்தனா்.