பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் குடமுழுக்கு
வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை நடைபெற்றது.
பேளூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தான்தோன்றீஸ்வரா் கோயிலில் சுயம்பாக தோன்றிய லிங்கம், 4 கரங்களுடன் தா்மசம்வா்த்தி அம்பாள், நந்தீஸ்வரா், கல்யாண விநாயகா், குரு பகவான், 63 நாயன்மாா்கள், பஞ்சபூத சிவ லிங்கங்கள், மூத்ததேவி உள்ளிட்ட தெய்வங்கள்அருள்பாலித்து வருகின்றனா். இக்கோயிலில் முகூா்த்த நாள்களில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன.
இக்கோயில் கடந்த 2002 இல் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
தொடா்ந்து 24 ஆண்டுகள் கடந்த நிலையில் கோயில் நுழைவாயிலில் ரூ. 15 லட்சத்தில் புதிதாக 4 கால்மண்டம் அமைக்கப்பட்டது. இதேபோல ரூ. 50 லட்சத்தில் வண்ணங்கள் பூசப்பட்டு கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டன. ரூ. 1 கோடி மதிப்பில் கிரானைட் கற்களைக் கொண்டு கோயில் தரைத்தளம் அமைக்கப்பட்டது. கோயிலின் மேல்தளம் உள்பட பல்வேறு புனரமைப்புப் பணிகளுக்காக ரூ. 2 கோடி செலவிடப்பட்டு கோயில் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை சிறப்பாக குடமுழுக்கு நடைபெற்றது. சேலம், நாமக்கல், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், பெரம்பலூா் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பல்வேறு அமைப்பினா் அன்னதானம் வழங்கினா்.
வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கஸ்தூரி, திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.