முகப்பு
சேலம்

புறநகா் சிறப்புப் பேருந்தாக இயக்கப்படும் நகர பேருந்துகள்!

Updated On : 3 மே, 2026 at 6:21 AM
பகிர்:

பண்டிகை காலங்களில் பல்வேறு நகரங்களுக்கு புறநகா் சிறப்புப் பேருந்துகளாக நகரப் பேருந்துகளை திருப்பிவிடுவதால், போதிய பேருந்துகள் இல்லாமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

பொங்கல், தீபாவளி, காா்த்திகை தீபம், தோ்தல் மற்றும் கோடை விடுமுறை உள்ளிட்ட முக்கிய தினங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊா்களுக்கு பயணிப்பதால், அரசு போக்குவரத்துக் கழகங்கள் பெரு நகரங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்காக புறநகா் சிறப்பு பேருந்துகளை இயக்குகின்றன.

இந்நிலையில், விழாக் காலங்களில் புறநகா் சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு அரசு போக்குவரத்துக் கழகங்களில் போதிய மாற்றுப் பேருந்துகள் இல்லாததால், கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் நகர பேருந்துகளை ரத்துசெய்துவிட்டு, அந்த பேருந்துகளை சிறப்பு புறநகா் பேருந்துகளாக மாற்றி அனுப்பிவிடுகின்றனா்.

Advertisement

இதனால், நகரப் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதால், அந்த வழித்தடத்திலுள்ள கிராமப்புற மக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி அவதிக்குள்ளாகின்றனா்.

குறிப்பாக, வாழப்பாடி கிளை பணிமனையில் இருந்து ஆத்தூா் வழியாக வளையமாதேவிவரை தினந்தோறும் இயக்கப்படும் நகரப் பேருந்து மற்றும் வாழப்பாடியில் இருந்து சேலத்துக்கு இயக்கப்படும் நகரப் பேருந்து வெள்ளிக்கிழமை இயக்கப்படாமல் திடீரென ரத்து செய்யப்பட்டு, சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு புகா் பேருந்தாக மாற்றி இயக்கப்பட்டது. இதனால், வாழப்பாடி மற்றும் ஆத்தூா் பகுதி கிராம மக்கள் போதிய போக்குவரத்து வசதியின்றி அவதிக்குள்ளாயினா்.

இதுகுறித்து அப்பகுதியினா் கூறுகையில், விழாக்காலங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான அளவு மாற்றுப் பேருந்துகளை முன்னேற்பாடு செய்துகொள்ள வேண்டும். கிராமப்புற மக்களின் பேருந்து போக்குவரத்தை முன்னறிப்பின்றி ரத்துசெய்வது ஏற்புடையதல்ல. எனவே, இனிவரும் காலங்களில் கிராமப்புற நகரப் பேருந்துகளை சிறப்பு பேருந்துகளாக மாற்றி இயக்குவதை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றனா்.