முகப்பு
மதுரை

பெரியகுளத்தில் மாம்பழம் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படுமா?

பெரியகுளம், அக். 26:   பெரியகுளம் பகுதி மா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.   பெரியகுளம் பகுதிய

Updated On : 20 செப்டம்பர், 2012 at 10:26 PM
பகிர்:

பெரியகுளம், அக். 26:   பெரியகுளம் பகுதி மா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

  பெரியகுளம் பகுதியில் மா விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப் பகுதியில் சோத்துப்பாறை, கும்பக்கரை, முருகமலை, ஈச்சமலை, செழும்பு, கோயில்காடு, மணல்காடு, புலிக்கூடு, சுக்காம்பாறை, சின்னாம்பாளையம் மற்றும் மஞ்சளாறு உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெறுகிறது.

  இதில் கிரேப், செந்தூரம், நீலம், காலேபாடி, இமாம்பசந்த், மனோரஞ்சிதம், மல்கோவா, பங்கனபள்ளி, அல்போன்சா மற்றும் கல்லாமை உள்பட பல்வேறு வகையான மாம்பழ ரகங்கள் விளைகின்றன.

Advertisement

  சீசன் காலமான எப்ரல் முதல் ஜூலை மாதம் வரை இப் பகுதியில் விளையக் கூடிய மாம்பழங்கள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் பாண்டிச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  தினசரி சுமார் 30 லாரிகள் மூலம் இப்பகுதியிலிருந்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விளைச்சல் அதிகமான காலங்களில் மாம்பழங்களை பறித்து அனுப்ப முடியாமல் தேக்கநிலை ஏற்படுகின்றது. இதனால் சேதம் ஏற்பட்டு, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

  இதனைத் தவிர்ப்பதற்காக இப் பகுதியில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என மா விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு மூலம் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

  இத் தொழிற்சாலை அமைப்பதன் மூலம் மாம்பழங்களைப் பதப்படுத்தி மாம்பழக் கூழ் தயாரித்து அதன்மூலம் ஜூஸ், ஜாம் போன்ற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து ஆண்டு முழுவதும் விற்பனை செய்யலாம்.   இதன் மூலம்விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். மேலும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

  எனவே, இப் பகுதி மா விவசாயிகளின் நலன் கருதி சுமார் 15 ஆண்டு காலக் கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைக்க அரசு சார்பில் தோட்டக் கலைத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.