திருவாடானை, ஆக. 5: திருவாடானை தாலுகா ஆர்.எஸ். மங்கலம் கோட்டக்கரை ஆற்று பகுதியில் கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிக்க, சிறு சிறு அணைகள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகா, தமிழகத்தின் இரண்டாவது நெல் களஞ்சியம் என அழைக்கபடுவது உண்டு. இங்கு சுமார் 1 லட்சத்து 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயும் திருவாடானை தாலுகா ஆர்.எஸ். மங்கலத்தில்தான் உள்ளது. இந்த ஊரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கோட்டக்கரை ஆறு உள்ளது. மழைகாலங்களில் சிவகங்கை மாவட்டத்தில் பெய்யும் மழை வெள்ளம், இந்த ஆற்றின் வழியாகத்தான் கடலில் வீணாகக் கலக்கிறது.
கடந்த 2004ம் ஆண்டு பெய்த கனமழையின் போது காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஒடியது. அப்போது அரசுப் பேருந்து ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு சுமார் 39 பேர் பலியானார்கள்.
அதன் விளைவாக தமிழக அரசின் முயற்சியால், ரூ. 14 கோடி செலவில் மிகப் பிரமாண்டமான பாலம் ஆற்றின் குறுக்கே கட்டபட்டுள்ளது. இந்த ஆற்றில் வரும் வெள்ளம் முழுவதும் கடலில் கலக்கிறது. எனவே இந்த ஆற்றின் குருக்கே 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பு அணை கட்டினால் இந்தப் பகுதியின் சிறு பாசன கண்மாய்களில் தண்ணீரை சேகரித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பெயன் பெறச் செய்ய முடியும். நிலத்தடி நீரும் உயரும். மழை இல்லாத காலங்களில் விவசாயம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.எனவே இப்பகுதியில் ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக ஆர்.எஸ். மங்கலம் ஒன்றியத் தலைவர் நல்ல சேதுபதி கூறியது:இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை இந்த அணைக்கட்டு பிரச்னை. நெல் பயிரைத் தவிர பருத்தி, மிளகாய், கரும்பு போன்ற பணப் பயிர்களையும் விளைவிக்கின்றனர். மழைநீர் இல்லாத போது நிலத்தடி நீரை நம்பித்தான் பயிர் செய்கிறார்கள். எனவே இப்பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். பரிசீலனை செய்வதாக அவர் உறுதி அளித்துள்ளார்.கடந்த மாதம் 15-ம் தேதி ஆர்.எஸ்.மங்கலம் வந்திருந்த துணை முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். பரிசீலனை செய்வதாக அவரும் கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.