முகப்பு
மதுரை

விலை இல்லை: வாடாமல்லி விவசாயிகள் வருத்தம்

திண்டுக்கல், ஆக. 18: நல்ல விலை கிடைக்கும் என்பதால், வாடாமல்லி பூவைப் பயிரிட்டு விளைச்சல் அதிகமாக இருந்துவரும் நிலையிலும் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் வாட்டமான நிலையில் இருந்து வருகின்றனர்.   

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:09 PM
பகிர்:

திண்டுக்கல், ஆக. 18: நல்ல விலை கிடைக்கும் என்பதால், வாடாமல்லி பூவைப் பயிரிட்டு விளைச்சல் அதிகமாக இருந்துவரும் நிலையிலும் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் வாட்டமான நிலையில் இருந்து வருகின்றனர்.

   திண்டுக்கல் வட்டம் பெரியகோட்டை, பில்லமநாயக்கன்பட்டி, கோம்பையன்பட்டி, புகையிலைப்பட்டி, கஸ்தூரிநாயக்கன்பட்டி, சிலுவத்தூர், ஜம்புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்புக்கு மேல் வாடாமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

   இதுகுறித்து பில்லமநாயக்கன்பட்டியில் பூ சாகுபடி செய்துள்ள விவசாயி கோவிந்தராஜன் கூறுகையில், ரூ. 5 ஆயிரம் செலவு செய்து 1.5 ஏக்கர் பரப்பில் வாடாமல்லி பயிரிட்டுள்ளேன். நாளொன்றுக்கு 60 கிலோ வரையில் பூக்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

   ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக வாடாமல்லி பூ அதிகளவு கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் 1 கிலோ பூ ரூ. 100-க்கு விற்பனையானது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ. 30-க்கு விற்பனையானது. இதனால் இப் பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 100 ஏக்கர் பரப்பில் பூ சாகுபடி செய்துள்ளனர். நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனை விவசாயிகள் மகிழ்வுடன் கொண்டாட முடியவில்லை.

   காரணம், ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ. 20-க்கு விற்பனையான பூ திங்கள்கிழமை ரூ. 10 முதல் ரூ. 15 வரையில் மட்டுமே விலை போகிறது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் கொண்டு போய் தான் விற்பனை செய்கிறோம். விவசாயிகளிடம் குறைவான விலைக்கு பூக்களைக் கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் கூடுதலான விலைக்கு விற்பனை செய்து நல்ல லாபம் பெறுகிறார்கள்.

    ஓணம் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. விளைச்சலும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. விலை ஏற்றம் பெறுவதற்கான வாய்ப்பு என்பதும் குறைவாகவே உள்ளது.

    இதனால் கிலோ ஒன்றுக்கு ரூ. 3 முதல் ரூ. 7 வரை விற்பனை ஆகும் நிலை வரலாம். நிலைமை இவ்வாறு இருப்பதால், பூக்களைப் பறிப்பதற்கு வெளியில் இருந்து கூலி ஆள்களை அழைத்து வந்தால் செலவு கூடும் என்பதால், வீட்டில் உள்ளவர்களைக் கொண்டே பூக்களைப் பறித்து விற்பனைக்குக் கொண்டு செல்கிறோம்.   விளைச்சல் அதிகமாக இருந்த போதிலும், உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது என்பது காலங்காலமாக இருந்துவருவது வேதனையாக உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments