ராமநாதபுரம் உழவர் சந்தை சீர்படுத்தப்படுமா?
ராமநாதபுரம், மார்ச் 15:ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள உழவர் சந்தைஎப்போதும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. 1996-ல் தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் துவக்கப்பட்டன. விவசாயிகளுக்கும், பொது
ராமநாதபுரம், மார்ச் 15:ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள உழவர் சந்தைஎப்போதும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
1996-ல் தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் துவக்கப்பட்டன. விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே இடைத்தரகர்களின் தலையீடுகள் எதுவும்
இல்லாமல், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை நேரடியாகவும் குறைந்த விலையிலும் விற்பனை செய்வதற்கு துவங்கப்பட்டதே இந்த உழவர் சந்தை திட்டம். விவசாயிகள் நேரடியாக பொதுமக்களைச் சந்தித்து காய்கறி மற்றும் பழ வகைகளை குறைந்த விலைக்கு விற்றதால், மக்களிடமும் இத் திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
Advertisement
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் துவங்கப்பட்டன. பரமக்குடியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் 10 உழவர் சந்தைகளில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. ஏனெனில், இந்த உழவர் சந்தை அமைந்துள்ள இடம் ஏற்கெனவே காய்கறிகள், மீன்கள் விற்பனை செய்த இடத்துக்கு அருகிலேயே தொடங்கப்பட்டதும் ஒரு காரணமாகும்.
இதற்கு நேரெதிராக, ராமநாதபுரம் உழவர் சந்தை ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை சிறப்பான செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் பெரும்பாலும் வெறிச்சோடியே காணப்படுகிறது. புதிய பஸ் நிலையம் அருகில் உழவர் சந்தை அமைக்கப்பட்டிருந்தும், இங்குள்ள உழவர் சந்தையில் ஒருவரோ அல்லது இருவரோதான் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் உழவர் சந்தை அமைந்துள்ள இடம் நகர்ப் பகுதியிலிருந்து தொலைவில் உள்ளதால், இது பொது மக்களிடம் அதிக வரவேற்பு பெறாமல் உள்ளது. மேலும், உழவர் சந்தைக்கு அருகில் உள்ள திறந்தவெளி காலி இடத்தில் குப்பைகள், கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகள் தினசரி கொட்டப்படுவதால், அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அங்கு செல்ல விருப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்குத்தான் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக, விவசாயிகள் தங்களது விளை பொருள்களைஇங்கு விற்பனை செய்ய முக்கியத்துவம் தருவதில்லை. மேலும், உழவர் சந்தை இருக்கும் இடம் தெரியாமல் மறைவாக இருப்பதால், பிரதான சாலைகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்றும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் உழவர் சந்தையின் வேளாண்மை அலுவலர் ஞானசேகரன் இதுகுறித்து கூறியதாவது:
உழவர் சந்தை, ஆள்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் அமையவில்லை. இதனால் காய்கறிகள் வாங்கப் பெரும்பாலோர் வருவதில்லை. ஆட்சியர் மற்றும் வேளாண் இணை இயக்குநர் ஆகியோர் உத்தரவின்பேரில், சின்னக்கடைத் தெருவில் இயங்கும் காய்கறிச் சந்தையை அப்புறப்படுத்தி, அவற்றை உழவர் சந்தைப் பகுதிக்குள் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
ராமநாதபுரம் உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறிகளுக்கு மொத்த விலை மற்றும் சில்லறை விலை இவை இரண்டையும் சராசரி விகிதத்தில் கணக்கிட்டு மிகக் குறைவான விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிச் சந்தையில் வாங்கும் விலையை விட காய்கறிகள் இங்கு மிகவும் குறைவாகக் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.