போடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?
போடி, மார்ச் 30: போடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். போடி அரசு மருத்துவமனை 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு போடி நகர், போடியைச்
போடி, மார்ச் 30: போடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
போடி அரசு மருத்துவமனை 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு போடி நகர், போடியைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்கள், கேரள மாநிலம் பூப்பாறை, நெடுங்கண்டம், சாந்தான்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
மருத்துவமனை தொடங்கப்பட்ட காலத்தில் வெளிநோயாளிகளாக தினமும் 100 முதல் 300 பேர் வந்து சென்றனர். தற்போது இந்த மருத்துவமனையில் 74 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு 100 உள்நோயாளிகள் வரை சிகிச்சை பெறுகின்றனர். வெளி நோயாளிகளாக தினமும் 1000 பேர் முதல் 1500 பேர் வரை வந்து செல்கின்றனர்.
நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், போதிய வசதிகள் செய்யப்படவில்லை. கண், காது மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்கள் இல்லை. ஆரம்பத்தில் 4 மருந்தாளுநர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 3 மருந்தாளுநர்களே இருக்கின்றனர். கூடுதலாக மருந்தாளுநர்கள் இல்லாததால், மாத்திரை மருந்து வாங்க நோயாளிகள் சில மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
மருத்துவமனையில் போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லாததால் குப்பைகள், புதர்கள் மண்டி, சுகாதாரக்கேடாகக் காட்சி தருகிறது. பிரேதப் பரிசோதனை அறை அவ்வப்போது சுத்தப்படுத்தாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மருத்துவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். காவலர்கள் இல்லாததால் மருத்துவமனையில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் நிலை உள்ளது. மேலும் மாடுகள், பன்றி, நாய்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து நோயாளிகளுக்கும், ஊழியர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. சில தினங்களுக்கு முன் மருத்துவமனை ஊழியர் கார்த்திக் பாண்டி என்பவர் மாடு முட்டியதில் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்ற ஊழியர்கள் இல்லை. விஷம் குடித்துவிட்டு வரும் நோயாளிகளுக்கு வயிறை சுத்தம் செய்ய தனி அறை இல்லை. மருத்துவமனை வளாகத்தில் வெளிப்படையாக சுத்தம் செய்வதால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. மின் சலவை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டும் அவை செயல்பாட்டில் இல்லை. படுக்கை விரிப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் வேட்டி, உள்ளிட்ட ஆடைகளை சலவை செய்யாமல் பல நாள் பயன்படுத்தும் நிலை உள்ளது.
மாவட்ட துணை மருத்துவமனையாகக் கருதப்படும் இந்த மருத்துவமனையில் சுவாசக் கருவிகள், அவசர விபத்து சிகிச்சை, தீக்காய சிகிச்சை பிரிவு, தலைக்காயங்களை கண்காணிக்கும் சிகிச்சை பிரிவுகள் இல்லை. லேசான விபத்தில் காயமடைந்தவர்கள், விஷம் குடித்து தற்கொலைக்கு முயல்பவர்கள், லேசான தீக்காயம் அடைபவர்கள் கூட தேனி, மதுரை மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நிலையும் இதனால் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. அரசு இந்த மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து போடி மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் மனோகரனிடம் கேட்டபோது, மருந்தாளுநர் ஒருவரை உத்தமபாளையம் மருத்துவமனையிலிருந்து அழைத்துக் கொள்ள அனுமதி கேட்கப்பட்டுள்ளது, காவலர், பிளம்பர், எலக்ட்ரீசியன் தேவை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். விஷம் குடித்தவர்களுக்கு வயிறை சுத்தம் செய்யும் அறை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி நடைபெறும் என்றார்.