மதுரை மாவட்ட மண்ணெண்ணெய் விநியோக மையங்களில் காமிரா பொருத்தி இணையதள வழியில் கண்காணிக்கும் திட்டம்
மதுரை, மே 4: மண்ணெண்ணெய் விநியோக மையங்களில் முறைகேடுகளைத் தடுக்கவும், சீரான விநியோகத்தை ஏற்படுத்தவும் சிசி டிவி காமிராக்கள் பொருத்தி இணையதளம் வழியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைக
மதுரை, மே 4: மண்ணெண்ணெய் விநியோக மையங்களில் முறைகேடுகளைத் தடுக்கவும், சீரான விநியோகத்தை ஏற்படுத்தவும் சிசி டிவி காமிராக்கள் பொருத்தி இணையதளம் வழியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் சரியான எடையில், தரமான உணவுப் பொருள்கள் கிடைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ரேஷன் கடைகளில் உணவுப்பொருள்களின் இருப்பை தினந்தோறும் அறியும் பொருட்டு எஸ்.எம்.எஸ். திட்டமும், தனியார் சூப்பர் மார்க்கெட் போன்று நவீன முறையில் ரேஷன் கடைகளைப் புதுப்பிக்கும் "மாதிரி ரேஷன் கடைகள்' திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மண்ணெண்ணெய் விநியோக மையங்களில் சீரான மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை என்ற புகார் பொதுமக்களிடம் பரவலாக இருந்து வருகிறது.
இத்தகைய செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மண்ணெண்ணெய் விநியோக மையங்களில் கண்காணிப்புக் காமிராக்களை பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வில்லாபுரம், மாகாளிப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள மூன்று மண்ணெண்ணெய் விநியோக மையங்களில் சிசி டிவி காமிரா பொருத்தப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விநியோகிக்கும் இடத்திலும், பில் போடும் ஊழியர் அமர்ந்திருக்கும் இடத்திலும் இரு காமிராக்கள் முதல்கட்டமாக பொருத்தப்பட்டுள்ளன.
தொலைபேசி பிராண்ட் பேண்ட் இணைப்பு மூலம் காமிரா இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள கணினி மூலம் நேரடியாக மண்ணெண்ணெய் விநியோக மையத்தில் நடைபெறும் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
ஒரு விநியோக மையத்துக்கு ரூ.25 ஆயிரம் செலவில் இந்த புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் ஒளிக்காட்சி சுமார் 15 நாள்கள் வரையிலும் சேமிப்பதற்கான வசதி உள்ளதால், தேவைப்படும் தகவல்களை அவ்வப்போது அதிகாரிகள் பார்த்துக் கொள்ளவும் முடியும்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட மண்ணெண்ணெய் விநியோக மையத்தில் அன்றாடம் நடைபெறும் நடவடிக்கைகளையும், பணியாளர்களின் செயல்பாடுகளையும் நேரடியாகக் கண்காணிக்கவும் குறைகளைக் களையவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஏற்கெனவே, சென்னையில் 10 மையங்களில் இதுபோன்று பரீட்சார்த்த முறையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மதுரையிலும் தொடர்ந்து திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மதுரை மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் டாக்டர் கே.வி.எஸ். குமார் கூறியது:
மதுரை மாவட்டத்தில் உள்ள 1,145 நியாயவிலைக் கடைகள் கூட்டுறவு மூலம் இயங்கி வருகின்றன.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்துக் கடைகளையும் திறப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் சீரான வகையில் கிடைக்க வேண்டும். முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும்.
பணி நேரத்தில் ஊழியர்கள் ரேஷன் கடைகளில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக மாகாளிப்பட்டி, வில்லாபுரம், செல்லூர் கண்மாய்க் கரை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு மண்ணெண்ணெய் விநியோக மையங்களில் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர், மாவட்டத்தில் உள்ள 35 மண்ணெண்ணெய் விநியோக மையங்களிலும்
படிப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 1,115 ரேஷன் கடைகளிலும் இதேபோன்று கண்காணிப்பு காமிராக்கள் பொருத்துவதற்குரிய திட்டமும் பரிசீலனையில் உள்ளது என்றார் அவர்.