அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவரா?
போடி, ஜன. 6: போடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போடி அருகே உள்ளது சிலமலை கிராமம். இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த
போடி, ஜன. 6: போடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
போடி அருகே உள்ளது சிலமலை கிராமம். இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி கடந்த 2002-ம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப் பள்ளியில் சிலமலை, சூலப்புரம், மல்லிங்காபுரம், ராசிங்காபுரம், மணியம்பட்டி, திம்மிநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், சின்ன பொட்டிப்புரம், நாகலாபுரம், சமத்துவபுரம், எரணம்பட்டி, சங்கராபுரம், குப்பனாசாரிபட்டி, கோணாம்பட்டி, டி.புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களில் உள்ள மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டுமானால் தேவாரம், போடி, சில்லமரத்துப்பட்டி போன்ற ஊர்களுக்குத்தான் செல்ல வேண்டும். மாணவர்களின் நலன் கருதியே கடந்த 2002-ல் இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. போதிய கட்டட வசதி, மாணவர்கள் படிக்கும் இயற்கை சூழல் கொண்ட இப் பள்ளி தேனி மாவட்டத்தில் சிறந்த அரசு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், 2002-ம் ஆண்டு முதல், இப் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் எடுக்க முழு நேர தமிழாசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால் வேறு பள்ளிகளிலிருந்து தமிழாசிரியர்கள் பகுதி நேரமாக வந்து செல்கின்றனர்.
முழு நேர தமிழாசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் தமிழ் பாடத்தில் கவனம் செலுத்தி படிக்க முடியாத நிலை உள்ளது.
மேலும், கிராமப்புற மாணவர்கள் பயிலும் நிலையில் அவர்கள் தனி வகுப்புகளுக்கும் செல்ல வசதியின்றி அவதிப்படும் நிலை உள்ளது. மேலும் இப் பள்ளியில் கணக்கியல், வணிகவியல், பொருளாதாரம், கணிப்பொறி அறிவியல் ஆகிய பாடங்கள் கற்கும் வகையில் தனிப் பிரிவு (எழ்ர்ன்ல்) தொடங்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும், முதன்மைக் கல்வி அலுவலகமும் துரித நடவடிக்கை எடுத்து போடி சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், மேல்நிலை வகுப்புகளுக்கு முழு நேரத் தமிழாசிரியரும்,கணக்கியல்,வணிகவியல்,பொருளாதாரம்,கணினி அறிவியல் ஆகிய பாடங்கள் கொண்ட தனிப் பிரிவு ஒன்றும் தொடங்க வேண்டும் என சிலமலை நுகர்வோர் குழு மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் கே.ஸ்ரீதேவி கூறியது: இப்பள்ளியில் தற்போது பொறுப்புத் தமிழாசிரியர்கள் வேறு பள்ளியிலிருந்து வந்து செல்கின்றனர். விரைவில் பதவி உயர்வு பெறும் தமிழாசிரியரையோ அல்லது புதிய நியமனம் மூலமாகவோ தமிழாசிரியர் நியமிக்கப்படுவார் எனத் தெரிவித்தார்.