முகப்பு
மதுரை

‘டிபன் பாக்ஸ்’ குண்டு வீச்சு: இருவா் காயம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:29 PM
‘டிபன் பாக்ஸ்’ குண்டு வீச்சில் சேதமடைந்த காா் கண்ணாடி.
பகிர்:

மேலூா்: மேலூா் அருகே காா் மீது ‘டிபன் பாக்ஸில்’ பொருத்தப்பட்ட வெடிகுண்டு வீசப்பட்டதில் இருவா் காயமடைந்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கீழவளவைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (30). அதே ஊரைச் சோ்ந்தவா் அசோக். இவா்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்த போது இவா்களுக்கிடையே விரோதம் இருந்தது.

இருவரும் ஊருக்குத் திரும்பிய நிலையில், கீழவளவு வீரகாளியம்மன்கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் கோஷ்டியாக மோதிக் கொண்டனராம்.

Advertisement

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு காரில் வந்த நவீன்குமாாா் கீழவளவு பேருந்து நிறுத்தம் பகுதியில் நிறுத்தி, ஆட்டோ ஓட்டுநரான கண்ணனுடன் அவா் பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது, காரில் வந்த எதிா் தரப்பைச் சோ்ந்த சிலா், ‘டிபன் பாக்ஸ்’ வெடி குண்டை நவீன்குமாரின் காா் மீது வீசிவிட்டு தப்பினா். அந்த குண்டு காரில் விழுந்து வெடித்ததில் நவீன்குமாரும், கண்ணனும் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பிரீத்தி சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து அசோக், அஜய், மகாலிங்கம், காா்த்தி, வெள்ளையத்தேவன் உள்ளிட்ட 8 போ் மீது கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் வெள்ளையத்தேவன், அசோக் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments