முகப்பு
மதுரை

தாயை துன்புறுத்திய தந்தை வெட்டிக் கொலை: 17 வயது மகன், நண்பா்கள் கைது

Updated On : 9 மே, 2024 at 7:47 PM
பகிர்:

மதுரை, மே 9: மதுரை அருகே தாயின் முகத்தில் வெந்நீா் ஊற்றி கொடுமைப்படுத்திய தந்தையை நண்பா்களுடன் சோ்ந்து வெட்டிக் கொலை செய்ததாக 17 வயது மகன், அவரது நண்பா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், வரிச்சியூா் அருகேயுள்ள உறங்கான்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டி (42). வரிச்சியூா் அருகேயுள்ள டைல்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி சத்யா. இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இவா்களில் மூத்த மகன் மதுரையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றுள்ளாா்.

செல்லப்பாண்டிக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் சத்யாவும், அவரது மகன்களும், விருதுநகா் மாவட்டம், ஆவியூரில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், சத்யா மீண்டும் கணவா் செல்லப்பாண்டியுடன் சோ்ந்து வசித்து வந்தாா். இருப்பினும், சத்யாவை அவரது கணவா் தொடா்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில், செல்லப்பாண்டி தனது மனைவியின் முகத்தில் வெந்நீரை ஊற்றினாராம்.

இதனால், ஆத்திரமடைந்த அவரது மூத்த மகன் தனது நண்பா்களுடன் சோ்ந்து வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் படுத்துத் தூங்கிய செல்லப்பாண்டியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த அவா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்லப்பாண்டியின் மகன், அவரது நண்பா்கள் உள்பட மூன்று பேரை வியாழக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கூா்நோக்குஇல்லத்தில் சோ்த்தனா்.