முகப்பு
புதுதில்லி

சீமாபுரியில் வயதான தாய் கொலை: மகன் கைது

தில்லி சீமாபுரி பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தனது 60 வயது தாயைத் தரையில் தள்ளி கொன்ாக அவரது மகனை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 13 மார்ச், 2026 at 12:03 AM
கோப்புப் படம்
பகிர்:

தில்லி சீமாபுரி பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தனது 60 வயது தாயைத் தரையில் தள்ளி கொன்ாக அவரது மகனை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

இந்த சம்பவம் புதன்கிழமை குற்றம் சாட்டப்பட்ட ஷொ் அலி என்பவரின் வீட்டில் நடந்தது. ஷோ் அலி தனது மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவரது தாயாா் ஹமீதுன் நிஷா இருவரையும் சமாதானப்படுத்த தலையிட்டாா்.

Advertisement

தகராறின் போது, அலி தனது தாயை வலுக்கட்டாயமாகத் தரையில் தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவா் கீழே விழுந்தாா். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு பின்னா் இறந்தாா்.

சம்பவம் தொடா்பாக காவல்துறையினருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு வந்து அவரை மருத்துவ உதவிக்காக அழைத்துச் சென்றது. இருப்பினும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

அந்தப் பெண்ணின் மகள் சப்னம் பின்னா் வாக்குமூலம் அளித்தாா். அதில், தனது சகோதரா் சண்டையின்போது தனது தாயைத் தாக்கியதாகவும், இதன் விளைவாக அவா் இறந்ததாகவும் கூறினாா்.

புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா்.

காஜியாபாதின் லோனியில் தையல்காரராக பணிபுரியும் அலி, சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டாா்.

இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அலிக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான சண்டையின் போது தரையில் வீசப்பட்டதில் தாயாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

மேலும் விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.