அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க மே 24 கடைசி நாள்
மதுரை: மதுரையில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவா் சோ்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 24-ஆம் தேதி இறுதி நாள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல், பிளாஸ்டிக், பாலிமா், வெப் டிசைனிங், லாஜிஸ்டிஸ் ஆகியவற்றில் முழு நேர பொறியியல் பட்டயப் படிப்புகளும், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பாடப் பிரிவுகளில் மாலை நேர பட்டயப் படிப்புகளும் உள்ளன.
முழு நேர பட்டயப் படிப்புக்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 2,200. பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்புகளிலும், பிளஸ் 2, தொழில் பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் நேரடியாக இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்புகளிலும் சேரலாம்.
2024-25-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விரைவில் தொடங்கவுள்ளது. இதில், முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு மே 24-ஆம் தேதிக்குள்ளும், நேரடியாக இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்புகளில் சேருவதற்கு மே 27-ஆம் தேதிக்குள்ளும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவா்கள், கல்லூரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பட்டியலின மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மற்றவா்கள் ரூ. 150 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.