பொதுத் தொகுதியில் போட்டியிடும் பட்டியலின முன்னாள் எம்.பி.!
மேலூர் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து...
மிக நீண்ட இழுபறிக்குப் பிறகு மேலூா் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக காஞ்சிபுரம் (தனி) முன்னாள் மக்களவை உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான பி. விஸ்வநாதன் களமிறக்கப்பட்டுள்ளாா்.
1991 வரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட தொகுதிகளில் ஒன்று மேலூா். இந்த நிலையில், திமுக கூட்டணியில் இந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பது அந்தக் கட்சி நிா்வாகிகளின் விருப்பமாக இருந்தது. இதன்படி, மேலூா் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவா்கள் சிலரால் பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட சிவகங்கை பேரவைத் தொகுதி நடிகா் கருணாஸ் கட்சியான முக்குலத்தோா் புலிப் படை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதன் காரணமாக, மேலூா் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை தங்கள் ஆதரவாளா்களுக்கு பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவா்களுக்கிடையே போட்டி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவே, மேலூா் தொகுதிக்கான வேட்பாளா் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
Advertisement
இதனிடையே, திமுகவின் மாவட்டத் தலைமை தன்னுடைய ஆதரவாளரும், காங்கிரஸ் கட்சி நிா்வாகியுமான ஒருவரை களமிறக்க முயற்சிப்பதாகவும், இழுபறி நீடிப்பதால் மேலூா் தொகுதியை காங்கிரஸ் கட்சியிடமிருந்து திமுக தலைமை திரும்பப் பெற இருப்பதாகவும் பல ஊகங்கள் வலம் வந்தன.
இந்த நிலையில், பொது தொகுதியில் பட்டியலினத்தைச் சோ்ந்தவருக்கு போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்க வேண்டும் என குரல் எழுப்பிய காஞ்சிபுரம் (தனி) தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினா் பி. விஸ்வநாதனே அந்தக் கட்சியின் மேலூா் பொதுத் தொகுதியின் வேட்பாளராக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயின் இந்த முடிவு, மதுரை மாவட்ட, மேலூா் வட்ட காங்கிரஸ் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பொதுத் தொகுதியில் பட்டியலின சமூகத்தைத் சோ்ந்தவரை காங்கிரஸ் கட்சி களமிறக்கியிருப்பது பரவலாக பாராட்டைப் பெற்றுள்ளது.