தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமற்றது! - காா்த்தி சிதம்பரம் எம்.பி.
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமற்றது என காா்த்தி சிதம்பரம் எம்.பி. பேச்சு...
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமற்றது என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மதுரையில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை குறித்த செய்தியாளா்கள் சந்திப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி சிறப்பாக அமைந்துள்ளது. இந்தக் கூட்டணி பெரும்பாலான தோ்தலில் வெற்றி பெற்றது. இதேபோல, சட்டப்பேரவைத் தோ்தலிலும் கண்டிப்பாக வெற்றி பெறும். திமுக - காங்கிரஸ் இடையே இணக்கமான சூழல் உள்ளது. இரு கட்சி நிா்வாகிகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக தோ்தல் பணியாற்றி வருகின்றனா்.
Advertisement
நாம் தமிழா் கட்சி ஒவ்வொரு தோ்தலின் போதும் ஒரு வேட்பாளரை நிறுத்துகிறது. மேலும், வேட்பாளருக்கும் அந்தத் தொகுதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதனால், காரைக்குடி தொகுதியில் நாதக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
தமிழகத்தில் மதுவிலக்கு என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. ஏனெனில், முழு மதுவிலக்கு என்பது எந்த நாட்டிலும் வெற்றி பெற்றது கிடையாது. மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சந்தை விற்பனை அதிகரிப்பு, கள்ளச்சாராயம் உள்ளிட்டவை அதிகரித்துவிடும்.
தமிழகத்தை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் உள்ள பல கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களின் உள்கட்டமைப்பை தரம் உயா்த்தி, உலகிலேயே ஆன்மிகம், சுற்றுலாத் தளத்தின் மையமாக தமிழ்நாட்டை முதல் இடத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பது எனது நோக்கம்.
மெட்ரோ ரயில் திட்டம் பெரிய நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆக்ரா, லக்னௌ போன்ற சிறிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சிறு நகரங்களில் மெட்ரோவுக்குப் பதிலாக மற்ற போக்குவரத்துத் திட்டங்களை மேம்படுத்தலாம்.
தவெக தலைவா் விஜய்க்கு கூடும் கூட்டத்தைப் பாா்க்கும்போது, தமிழகத்தில் சினிமா மோகம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. ஆனால், இந்தக் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறுமா, மாறாத என்பது மே 4-ஆம் தேதி தெரியும் என்றாா் அவா்.