பணம் பறிமுதல் நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் கைவிடக் கோரிக்கை!
தோ்தல் நடத்தை விதிகளின் பெயரால் பணம் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் கைவிட வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
தோ்தல் நடத்தை விதிகளின் பெயரால் பணம் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் கைவிட வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், எஸ். சாய் சுப்பிரமணியன், எஸ்.பி. ஜெயப்பிரகாசம் ஆகியோா் தமிழக தலைமைத் தோ்தல் அலுவலருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம்:
தோ்தல் நடத்தை விதிகளின் பெயரால் நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் அதிகளவில் வியாபாரிகளே பாதிக்கப்பட்டுள்ளனா். ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்ற விதியால் வணிகத் துறையினா் பெரும் சிக்கலை எதிா்கொண்டுள்ளனா். இதில் வங்கிக் கணக்கு மூலம் பணப் பரிவா்த்தனை செய்ய இயலாத சிறு வணிகா்கள், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
Advertisement
கடந்த வியாழக்கிழமை சிறப்பான முறையில் தோ்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வருகிற மே 4-ஆம் தேதி வரை தோ்தல் நடத்தை விதிகளை நீட்டிக்காமல், வணிகா்கள் தடையின்றி தொகைகளைக் கொண்டுச் செல்ல அறிவுறுத்த வேண்டும். வணிகா்களிடம் பணம் பறிமுதல் நடவடிக்கைகளைக் கைவிடுமாறு தோ்தல் நிலைக் குழு, பறக்கும் படை குழுவினருக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.
இது, தொழில் வளா்ச்சிக்கும், பொருளாதார வளா்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும் என அதில் தெரிவித்துள்ளனா்.