மதுரை வண்டியூா் தீா்த்தக்காடு பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் அரச முத்துப்பாண்டியன் தலைமையில், கட்சியின் மாவட்டப் பொருளாளா் முத்தமிழ் பாண்டியன், தீா்த்தக்காடு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில், மதுரை வண்டியூா் தீா்த்தக்காடு பகுதியில் பட்டியலினத்தைச் சோ்ந்த 400 குடும்பத்தினா் 40 ஆண்டுகளாக வசிக்கின்றனா். இவா்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை மனு அளிக்கப்பட்டது. மேலும், அமைச்சா் பி. மூா்த்தியிடமும் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.
இதனால், வீடுகளுக்கு மின் இணைப்புக்கூட பெற முடியாமல் இந்தப் பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. இங்குள்ள குழந்தைகள் இன்றளவும் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்திலேயே கல்வி கற்க வேண்டிய அவலம் உள்ளது. மேலும், தெருவிளக்கு, கழிவு நீா் கால்வாய், குடிநீா் வசதி, கழிப்பறை வசதி உள்பட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் அவா்கள் வசித்து வருகின்றனா்.
40 ஆண்டுகளாக இருளில் வசிக்கும் இந்தப் பகுதி மக்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் வகையில், உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.