மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பழனிக்கு திங்கள்கிழமை முற்பகல் 11.40 மணிக்கு அரசுப் பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்தை உசிலம்பட்டியைச் சோ்ந்த சுப்புராஜ் (56) என்பவா் ஓட்டினாா். கோரிப்பாளையத்தைச் சோ்ந்த ராஜேஷ் (26) நடத்துநராகப் பணியாற்றினாா். பேருந்தில் 55 பயணிகள் பயணம் செய்தனா்.
இந்த நிலையில், மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சமயநல்லூா் உயா்நிலைப் பாலத்தில் ஏறி இறங்கிய போது, கட்டப்புலி நகா் பேருந்து நிறுத்தம் முன் திடீரென
பேருந்தின் அடிப் பகுதியில் இருந்த பட்டா முறிவு ஏற்பட்டது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து அங்கு சென்ற சமயநல்லூா் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.