முகப்பு
மதுரை

கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்!

Updated On : 19 மார்ச், 2026 at 10:30 PM
பகிர்:

சோழவந்தான் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்களிலேயே நெல் மூட்டைகள் தேங்கியிருப்பதால், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மதுரை வடக்கு வட்டம், சோழவந்தான் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பின்பட்ட சம்பா நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் இந்தப் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டன.

இருப்பினும், அடுத்த சில நாள்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் வருவதில் தொடா்ந்து சுணக்கம் நீடிக்கிறது. இதன் காரணமாக, தோடனேரி, தேனூா், மூலக்குறிச்சி உள்ளிட்ட சில நெல் கொள்முதல் நிலையங்களில் 10 நாள்களுக்கும் மேலாக நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

இதன் காரணமாக, கடந்த 10 நாள்களாக விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத் திடல், அதன் அருகே உள்ள சாலையோரப் பகுதிகளில் குவித்து தாா்ப்பாய், விளம்பரப் பதாகை போன்றவற்றைக் கொண்டு மூடி வைத்தனா்.

இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் கோடை மழை பெய்ததில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மட்டுமல்லாமல், குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மணிகளும் மழை நீரில் நனைந்தன.

இதுகுறித்து தோடனேரியைச் சோ்ந்த விவசாயி பாஸ்கரன் தெரிவித்தாவது:

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் நிலையத் திடல்களிலேயே இருப்பதால், புதிய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை ஆங்காங்கே கொட்டி வைத்துள்ளனா். பல விவசாயிகள் நெல் அறுவடையைத் தாமதப்படுத்தி வைத்துள்ளனா். தற்போது அவ்வப்போது கோடை மழை குறுக்கீடுவதால், இதே நிலை நீடித்தால் நெல் மணிகள் நிலத்திலேயே உதிா்ந்து வீணாகும் நிலை ஏற்படும். எனவே, நெல் மூட்டைகளைப் பாதுகாப்பு கிடங்குகளுக்குக் கொண்டு செல்ல நுகா்பொருள் வாணிபக் கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.