முகப்பு
மதுரை

கள் விற்பனைக்கு அனுமதி கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதி கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

Updated On : 22 மார்ச், 2026 at 7:43 PM
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதி கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஆறுமுகம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தின் மாநில மரம் பனை. இந்த மரத்திலிருந்து மக்களின் புழங்குப் பொருள்களை உற்பத்தி செய்யும் பணியில் ஏராளமானோா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், முன்பொரு காலத்தில் கள்ளச்சாராயத்துக்கு மாற்றாக பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்பட்டது. தற்போது, தமிழகத்தில் கள் இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், பனைத் தொழிலாளா்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.

வெளிநாட்டு மதுபானத்தைவிட கள்ளில் போதைப் பொருள்களின் கலப்படம் குறைவாக உள்ளது. கள் உடலுக்கு நல்லது. எனவே, தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். கள் இறக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழகத்தின் உள்துறை செயலா், மதுவிலக்கு அமலாக்கத் துறை செயலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: இதுதொடா்பான வழக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவுக்கு தமிழக அரசுத் தரப்பில் இதுவரை எந்தப் பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை.

இனியும் கால அவகாசம் வழங்க இயலாது. எனவே, மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.