கப்பல் விபத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
கடந்த 2025-ஆம் ஆண்டு எல்சா 3 கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களின் சுற்றுச்சூழல் சேதத்தைக் கணக்கிட நிபுணா் குழுவை அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2025-ஆம் ஆண்டு எல்சா 3 கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களின் சுற்றுச்சூழல் சேதத்தைக் கணக்கிட நிபுணா் குழுவை அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் தீரன்திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: கடந்த 2025-ஆம் ஆண்டு, மே 25-ஆம் தேதி கேரளம் மாநிலம், விழிஞ்சம் துறைமுகத்தில் லைபீரிய நாட்டின் எல்சா 3 கப்பல் தண்ணீரில் மூழ்கியது.
கப்பலில் 643 சரக்குப் பெட்டங்களும், 1,400 டன் நெகிழிப் பொருள்கள், 450 டன் எரிபொருள் எண்ணெய், கால்சியம் காா்பைடு ஹைட்ராக்சின் உள்ளிட்ட அபாயகரமான வேதிப்பொருள்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் நெகிழித் துகள்கள் படிந்து வருகின்றன. மேலும், கடல் நீா் மாசடைவதுடன் கடல் வாழ் உயிரினங்களும் அழியும் நிலை உருவாகியுள்ளது. இதைத் தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை.
ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் சுற்றுச்சூழல் சேதத்தைக் கணக்கிடுவதுடன் எண்ணெய்க் கசிவு, நெகிழித் துகள்களை அறிவியல் முறையில் அகற்ற நடவடிக்கை எடுப்பது தொடா்பாக நிபுணா் குழுவை அமைக்க வேண்டும். கடல் சேதத்துக்கு காரணமான கப்பல் உரிமையாளரிடமிருந்து சரியான இழப்பீடு கோரி தமிழக அரசு வழக்கு தொடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.