முகப்பு
மதுரை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மருத்துவப் பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல்

Updated On : 30 மார்ச் 2026, 3:09 am IST
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - படம்: DNS
பகிர்:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 காவலா்களின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 30) தாக்கல் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோா் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனா். இதுதொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் உதவி ஆய்வாளா் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனா்.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை எனவும், குற்றஞ்சாட்டபட்ட காவலா்கள் அனைவரும் குற்றவாளிகள் எனவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த 23- ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், காவலா்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சிறையில் உள்ள அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 9 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு அவா்களுக்கு மன நலம், உடல் நலம் குறித்து பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடைபெற்றன. இதுதொடா்பான அறிக்கையை மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் முன் திங்கள்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் மருத்துவா்கள் தாக்கல் செய்ய உள்ளனா். இதன்பிறகு, குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்களும், அபராதமும் விதிக்கப்படலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.