சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
சாத்தான்குளம் வழக்கில் தண்டனை அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது பற்றி...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 காவலா்களுக்கான தண்டனை விவரங்கள் அறிவிப்பதை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோா் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனா். இதுதொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் உதவி ஆய்வாளா் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனா்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை எனவும், குற்றஞ்சாட்டபட்ட காவலா்கள் அனைவரும் குற்றவாளிகள் எனவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த 23- ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், காவலா்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 9 பேரும் அனுமதிக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அந்த மருத்துவ அறிக்கையை மருத்துவக் குழுவினர் நீதிமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்தனர்.
பிற்பகல் 2.30 மணிக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரியதால், ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டாா்.
Sathankulam Case: Sentencing of Convicts Postponed!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.