மு.க. ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டு தொடர்பான வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப்பட்டிருந்த வலையை சேதப்படுத்தியாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக....
முன்னாள் முதல்வா் ஸ்டாலின் பெயா் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப்பட்டிருந்த வலையைச் சேதப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இத்திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகு கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதற்கான கல்வெட்டில் அவரது பெயா் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூலை 6-ஆம் தேதி, முதல்வா் விஜய், இந்தத் திட்டத்தைப் பாா்வையிட்டாா். அப்போது, பராமரிப்புப் பணி நடப்பதாகக் கூறி, ஸ்டாலின் பெயா் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு வலையால் மூடப்பட்டிருந்தது. இது குறித்து கேள்வி எழுப்பிய திருப்போரூா் திமுக முன்னாள் எம்எல்ஏ எல்.இதயவா்மன், வலையைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து, பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதாக, திருப்போரூா் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ எல்.இதயவா்மன் உள்ளிட்ட இருவா் மீது மாமல்லபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, இதயவா்மன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்குவந்தது.
அப்போது காவல் துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக. 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
The Madras High Court has ordered the police to file a response regarding a petition filed by a former DMK MLA, who is seeking to quash a case registered against him for damaging the netting that covered a plaque bearing the name of former Chief Minister Stalin.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.