மு.க. ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டு தொடர்பான வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப்பட்டிருந்த வலையை சேதப்படுத்தியாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக....
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப்பட்டிருந்த வலையை சேதப்படுத்தியாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, திமுக முன்னாள் எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இத்திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகை கடந்த 2024-ஆண்டு பிப்ரவரியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அதற்கான கல்வெட்டில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த ஜூலை 6-ஆம் தேதி நெம்மேலிக்கு சென்று இத்திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் பார்வையிட்டார். அப்போது, பராமரிப்புப் பணி நடப்பதாகக் கூறி ஸ்டாலினின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு வலையால் மறைக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த வலையைச் சேதப்படுத்தி பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக திருப்போரூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ எல். இதயவர்மன் உள்ளிட்ட இருவர் மீது மாமல்லபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இதயவர்மன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The Madras High Court has ordered the police to file a response regarding a petition filed by a former DMK MLA, who is seeking to quash a case registered against him for damaging the netting that covered a plaque bearing the name of former Chief Minister Stalin.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.