கருணாநிதி நினைவு நாள்: மு.க. ஸ்டாலின் புகழாரம்
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம்
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் அஞ்சலி கூட்டங்களும், அமைதிப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வர். 13 முறை சட்டப்பேரவை உறுப்பினர்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டின் முதல்வராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர். அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர். நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி.
அரசியலும் ஆட்சியும், கலையும் இலக்கியமும், திரையும் நாடகமும், சின்னத்திரையும் சமூக வலைத்தளமும் என அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை.
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் கருணாநிதி, உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று.
அவர்தான் நமக்கு எல்லாம்; அவரின்றி நாம் இல்லை" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Former Chief Minister Karunanidhi's Death Anniversary: M.K. Stalin Pays Tribute
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.