முகப்பு
திண்டுக்கல்

பருவ மழை பொய்த்ததால் மலைப் பூண்டு விவசாயம் பாதிப்புநமது நிருபர்

கொடைக்கானலில் பருவமழை பொய்த்ததால் பூண்டு விவசாயம்  பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 மே 2013, 12:11 am IST
பகிர்:

கொடைக்கானலில் பருவமழை பொய்த்ததால் பூண்டு விவசாயம்  பாதிக்கப்பட்டுள்ளது.

 கொடைக்கானலில் விவசாயப் பயிர்களான கேரட், உருளை, பீன்ஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகளும் விளைந்து வருவது போல மலைப் பகுதிகளான பூம்பாறை,மன்னவனூர், கூக்கால்,கிளாவரை,கவுஞ்சி,குண்டுபட்டி,விடுதலை நகர், பழம்புத்தூர்,புதுப்புத்தூர், வில்பட்டி, புலியூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட மேல்மலை கிராமங்களில் பணப் பயிரான பூண்டு விளைவிக்கப்படுகிறது.

 பூண்டு விளைவதற்கு போதிய அளவு தண்ணீர் தேவைப்படும். 5 மாதத்தில் பூண்டு  நல்ல விளைச்சல் அடைந்து அதிக விலைக்குப் போகும். கொடைக்கானலில் கடந்த  நான்கு மாதங்களுக்கு மேலாக, பருவமழை பொய்த்ததால் பூண்டு விளைச்சல் இல்லாமல் இருந்து வந்தது.

Advertisement

Advertisement

 பூண்டு விளைவிப்பதற்கு நல்ல சாண உரங்கள் தேவைப்படும். நல்ல சத்துள்ள உரங்கள் வைக்க வேண்டும். பூச்சி நோய் தாக்காமல் இருக்க பூச்சி தெளிப்பானை பயன்படுத்த வேண்டும். நன்கு விளைந்த பின் பூண்டைக் காயவைக்க வேண்டும் அதன்பின் தரம் வாரியாக விவசாயிகள் வெளிமார்க்கெட்டுக்கு அனுப்புவது வழக்கம்.

 இதுகுறித்து, மேல்மலை விவசாய சங்கத்தினர் கூறியது:

 கொடைக்கானலில், கடந்த பல மாதங்களாக பருவ மழை பெய்யாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேல்மலைக் கிராமங்களில் மட்டும் அதிக அளவில் மலைப்பூண்டு பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 25-க்கும் மேற்பட்ட

கிராமங்களில் வெள்ளைப் பூண்டு பயிரிடப்பட்டிருந்தது.ஆனால் போதிய மழை இல்லாத காரணத்தால் பூண்டு விளைச்சல் குறைந்துள்ளது.

 பூண்டில் மலைப் பூண்டு, ஒற்றைப் பூண்டு, பெரும் பூண்டு ஆகிய வகைகள் உள்ளன.

பல வெளியூர்களில் இருந்து வரும் பூண்டைப் போல அல்லாமல், கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு நல்ல மதிப்பும் மற்றும் விலையும் கிடைக்கும்.

  உணவுகளில் அதிக அளவில் மலைப் பூண்டு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 மலைப் பகுதிகளில் விளையும் பூண்டுகளைக் கொண்டு செல்வதற்கு சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

  மலைப் பூண்டு விற்பனைக் குழுத் தலைவர் கூக்கால் ஆறுமுகம் கூறியதாவது:

வெளிமாநில பூண்டுகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் கொடைக்கானல் மலைப் பூண்டுக்குத் தான் நல்ல விலையும், மார்க்கெட்டில் மதிப்பும் உள்ளது கொடைக்கானல் மலைப் பகுதியிலிருந்து ஆண்டுதோறும் 300 முதல் 400 டன் வரையிலும் மார்க்கெட்டிற்கு மலைப் பூண்டு கொண்டு செல்வது வழக்கம். ஆனால்

இந்தாண்டு மழை இல்லாததால் 100 முதல் 150 டன் வரையில் மட்டுமே பூண்டு கொண்டு செல்லப்பட்டது.

 நல்ல விளைச்சல் இருந்தால் 100 கிலோ ரூ. 12 ஆயிரம் வரை விற்பனையாகும் இந்தாண்டு 100 கிலோ ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரம் வரை விற்கிறது.

 புகை பூண்டு கிலோ ரூ. 70 முதல் ரூ. 80 வரையும், பச்சைப் பூண்டு ரூ. 40 முதல்  ரூ. 50 வரையும் விற்பனை ஆகிறது.

 மேலும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் பூண்டுகள் வத்தலகுண்டு குடோனில் வைக்கப்பட்டு மொத்த வியாபாரிகள் அங்கு வந்து பல இடங்களுக்கும் கொண்டு செல்கின்றனர்.

 தேனி மாவட்டம், வடுகபட்டியில் உள்ள வியாபாரிகளிடம் பல்வேறு பிரச்னைகளுக்காக கடன் பெற்றுள்ளதால், குறைந்த விலைக்கு பூண்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வத்தலகுண்டுவில் உள்ள பூண்டு மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் சரியாக வருவதில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

 பூண்டு விவசாயத்தால் இந்த ஆண்டு ரூ. 5 கோடி வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உதவி வழங்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.