தமிழக அரசியல் நிலவரங்களை கணிக்கும் ஜோதிடர்களாக பாஜவினர் மாறிவிட்டதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா மற்றும் உலக மகளிர் தின விழா, தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சு. திருநாவுக்கரசர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தமிழக அரசு மட்டுமின்றி அதிமுக கட்சியும் கோமா நிலைக்கு சென்றுவிட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, மத்திய, மாநில சுகாதாரச் செயலர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு, உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும். அதிமுகவில் உள்கட்சிப் பூசலை உருவாக்கி, தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது பாஜக. அந்த எண்ணம் நிறைவேறாது. தமிழக அரசியல் நிலவரங்களை கணிக்கும் ஜோதிடர்களாக பாஜவினர் மாறி வருகின்றனர். அந்தக் கணிப்புகள் உண்மையாக மாறுவதை மக்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பிரதமர் மோடி ஆட்டுவிக்கும் பொம்மைகளாக தமிழக அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் மாறிவிட்டனர். செல்வாக்குப் பெற்ற முதல்வர் இல்லாதபட்சத்திலும், பெரும்பான்மையுள்ள அதிமுக அரசு 4 ஆண்டுகளையும் நிறைவு செய்யவேண்டும் என்றார்.