பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில், பழனிக் கல்வி மாவட்டம் சி -குறுவட்ட அளவிலான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இக் கல்லூரி வளாகத்தில், பாரதியார் தினம், குடியரசு தின தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகள், சண்முகநதி பாரத் வித்யாபவன் பள்ளி சார்பில் செய்யப்பட்டிருந்தன. தடகளப் போட்டிகளை, கல்லூரி முதல்வர் அன்புச்செல்வி துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜதிலகம் முன்னிலை வகித்தார்.
ஒலிம்பிக் கொடி மற்றும் சி- குறுவட்டப் போட்டிகளுக்கான கொடி மற்றும் பள்ளிக் கொடியை நல்லாசிரியர் சிவகணபதி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஏற்றினர். இதில், ஓட்டப் பந்தயம், தட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளித் தாளாளர் ராஜ்குமார் மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். முன்னதாக, பாரத் வித்யா பவன் பள்ளி முதல்வர் சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில், பாரத் வித்யா பவன் பள்ளி மோகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், ஆசிரியர்களும் பங்கேற்றனர்.