திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உலகநலன், விவசாயம் செழுமையடைய வேண்டி, அங்காரஹப் பரிகார யாகம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
ஆத்மா பவுண்டேஷன் நிர்வாகி சி.என். அசோக்ஜி தலைமையில், செவ்வாய் ஸ்தலமான பழனியில் அங்காரஹப் பரிகார யாகம் நடைபெற்றது. யாகசாலை பூஜையை, பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், முன்னாள் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் கே.கே.ராஜா உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். ஹோட்டல் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, சிட்டி சினி கிரியேஷன்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நடிகைகள் நிக்கி ஹல்ராணி, சிருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர். யாகத்தில் ஏராளமான சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு வேத மந்திரங்களை முழங்கினர். யாகவேள்வியில் பழங்கள், இனிப்புகள், மலர்கள், பட்டுத்துணிகள், நவரத்தினங்கள் இடப்பட்டு பூர்ணாஹூதி நடைபெற்றது. யாகசாலையில் அங்காரஹப் பரிகார சக்கரங்கள் வைக்கப்பட்டு, அவற்றுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டு பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.
இந்த பூஜையில், டிஎஸ்பி. வெங்கட்ராமன், முன்னாள் டிஎஸ்பி. ராமசாமி, சுகிதா மனோகரன், திருவண்ணாமலை கிஷோர்பாபா, வருத்தமில்லா வாலிபர் சங்க நிர்வாகிகள் மதனம், முருகானந்தம், பாலகிருஷ்ணா விடுதி காந்தி, அர்பன் வங்கி தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.