நத்தம் அருகே அரசு பேருந்துடன் கார் மோதியதில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
மதுரையிலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவுப் பேருந்து திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நோக்கி வியாழக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், நத்தம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 7 பேர் மதுரை நோக்கி காரில் பயணித்துள்ளனர். நத்தம்- மதுரை சாலையில் வத்திப்பட்டி அடுத்துள்ள புதுக்கோட்டை விலக்கு பகுதியில் வந்தபோது, அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திலீபன் சக்கரவர்த்தி(25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே காரில் பயணித்த மதுரையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ், மித்ருரூபன், ஜீவா, அரவிந்த் மேத்யூ, ஜெயக்குமார், ஹரி விக்னேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே, மதுரை தெற்கு வாசலைச் சேர்ந்த ஜெயக்குமார் உயிரிழந்தார். நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.