மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில், 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்ற திண்டுக்கல் பி.ஆர்.என்.பி. மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை பாராட்டினர்.
குடியரசு தின, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில், மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டியில், 14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் திண்டுக்கல் ம.மூ.கோவிலூர் பகுதியிலுள்ள பி.ஆர்.என்.பி. மெட்ரிக். பள்ளி மாணவி டி.தர்ஷினி மகளிர் பிரிவிலும், இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் வி.ராகுல்கண்ணா ஆண்கள் பிரிவிலும் முதலிடம் பெற்றனர்.
இந்நிலையில், போட்டியில் முதலிடம் பிடித்த டி.தர்ஷினி, வி.ராகுல்கண்ணா மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் பி.முருகன் ஆகியோரை பி.ஆர்.என்.பி. பள்ளி நிர்வாக இயக்குநர் ஆர்.சந்திரமோகன், தாளாளர் சி.ராஜலட்சுமி, முதல்வர் என்.ஹேமா சுகந்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை பாராட்டி வாழ்த்தினர்.