கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்
திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில், அமைதி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில், அமைதி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மற்றும் ஆர்விஎஸ் கல்வியியல் கல்லூரி சார்பில், கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதில், மாவட்டத்தில் உள்ள 13 கல்லூரிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.போட்டிகளை ஏடிஎஸ்பி ஸ்ரீநிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.சௌந்தரராஜன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். போட்டிகளின் முடிவில், தடகளப் பிரிவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வேடசந்தூர் அடுத்துள்ள அமைதி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் எம்எல்ஏ வி.பி.பி.பரமசிவம் தலைமை வகித்தார். பூப்பந்தாட்ட கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஸ்ரீநிவாசன், நாட்டாண்மை என்.எம்.பி.காஜாமைதீன் ஆகியோர் முன்னிலையில், பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பேராசிரியர் சர்மிளா, ஆர்விஎஸ் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி எம்வி.சூரியகுமாரி, உடற்கல்வி பேராசிரியர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.