ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் விருப்பாச்சி கணவாய் மேட்டில், பழனி பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக நடத்து செல்வதற்காக வைக்கப்பட்ட மணல் மூட்டைகளை அகற்றாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்களுக்காக ரூ. 6 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலையின் தெற்கு பகுதியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைப்பாதையில் பக்தர்கள் நடத்து சென்று வருகின்றனர். இந்நிலையில், விருப்பாச்சி கணவாய் மேட்டில் இருந்து வீரலப்பட்டி பிரிவு வரை பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர், சாலையில் மணல் மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்தனர். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தைப்பூசம் நிறைவடைந்து விட்டது. ஆனாலும், விருப்பாச்சி கணவாய் மேட்டிலிருந்து வீரலப்பட்டி பிரிவு வரை அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் அகற்றப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லுவோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சாலையின் நடுவேயுள்ள இந்த மணல் மூட்டைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.