திண்டுக்கல் அருகே செவிலியர் வீட்டின் பூட்டை உடைத்து, 25 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள நல்லாம்பட்டி விஎஸ்.நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர்(42). இவரது மனைவி மேரி. காந்திகிராமத்தில் உள்ள கஸ்தூரி பாய் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். மேரி பணிக்கு சென்றுவிட்ட நிலையில், அவரது 2 குழந்தைகளும் திங்கள்கிழமை பள்ளிக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாஸ்கர், உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டாராம். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த 25 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் பட்டுச் சேலை உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதனிடையே வீட்டிற்கு திரும்பி வந்த பாஸ்கர், பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் பாஸ்கர் அளித்தபுகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.