முகப்பு
திண்டுக்கல்

புதையல் எடுத்து தருவதாக மோசடி: திண்டுக்கல் அருகே பூசாரியை கடத்திய 7 பேர் கும்பல் கைது

புதையல் எடுத்து தருவதாக கூறி, பெண்ணை ஏமாற்றிய பூசாரியை கடத்திச் சென்ற 7 பேரை வேடசந்தூர் போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 30 மார்ச், 2018 at 1:29 AM
பகிர்:

புதையல் எடுத்து தருவதாக கூறி, பெண்ணை ஏமாற்றிய பூசாரியை கடத்திச் சென்ற 7 பேரை வேடசந்தூர் போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
 திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள தங்கச்சியம்மாப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல்( 47). பூசாரியான இவர், மாந்திரிகம் செய்து புதையல் எடுத்து தருவதாக சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அதிக அளவில் பணம் பெற்றாராம். ஆனால், புதையல் எடுத்து கொடுக்காமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் அந்த பெண்ணை சக்திவேல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
 இதனால் அந்த பெண், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மதன்குமார்(32) என்பவரிடம் முறையிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, மதன்குமார், திருப்பூரைச் சேர்ந்த தனது நண்பர் சிவா ஆகியோர் தூண்டுதலின் பேரில் 7 பேர் கொண்ட கும்பல் சக்திவேலை கடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் டிஎஸ்பி சிவக்குமார், ஆய்வாளர் கதிரவன், சார்பு ஆய்வாளர் ரவி உள்ளிட்ட போலீசார், வேடசந்தூர் அடுத்துள்ள நவாமரத்துப்பட்டி பகுதியில் சக்திவேலை மீட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட  திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் (37) மற்றும் வசந்த் (28), கரூரைச் சேர்ந்த சக்திவேல் (40), திருப்பூர் பிரகாஷ் (25), தாராபுரம் கர்ணன் (50) மற்றும் கிருஷ்ணமூர்த்தி(47), பழனியைச் சேர்ந்த பத்திரகாளி(47) ஆகியோரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கடத்தலுக்கு முக்கிய காரணமான மதன்குமார் மற்றும் சிவா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். 
அவர்கள் பிடிபட்டால் மட்டுமே, பூசாரி சக்திவேலிடம் புதையலுக்காக பணம் கொடுத்த பெண் குறித்த விவரம் தெரிய வரும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.