கொடைக்கானல் அருகே 20 கி.மீ. தொலைவிலுள்ள பேரீஜம் ஏரியிலிருந்து பெரியகுளம் நகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், ஜமீன்தார் காலத்தில் குழாய் பதித்து, தண்ணீர் கொண்டுவரப்பட்டது. இதனால், பெரியகுளம் பகுதிக்கு பல நூற்றாண்டுகளாகவே தண்ணீர் பிரச்னை என்பது இல்லை.
இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர், பெரியகுளம் நகராட்சிக்கு தண்ணீர் வெளியேறும் பகுதியை அடைத்து, மற்றொரு வழியில் விவசாயத்துக்கு தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை, கொடைக்கானல் வனத் துறையினரும், பெரியகுளம் நகராட்சியினரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், பெரியகுளம் பகுதி மக்களுக்கு வறட்சி காலத்தில் கூட பேரீஜம் ஏரி தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, பேரீஜம் ஏரியிலிருந்து பெரியகுளத்துக்கு தண்ணீர் வெளியேற்றப்படும் குழாயிலுள்ள அடைப்பை நீக்கிவிட்டு, முறையாக தண்ணீரை கொண்டு வர, பெரியகுளம் நகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.