கொலை வழக்கில் தொடர்பு: இளைஞர்கள் 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில்
திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
திண்டுக்கல்லை அடுத்துள்ள முத்தழகுப்பட்டியைச் சேர்ந்த அருள்சாமி, கடந்த ஜனவரி 3 ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் தொடர்புடைய பொன்னுமாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்த குருநாதன் மகன் அன்பழகன் (23), லட்சுமணன் மகன் ரெங்கமூர்த்தி என்ற மூர்த்தி (30), குமரேசன் மகன் ஸ்ரீரெங்கன் (23), திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் ராஜேஷ்(24), இவரது அண்ணன் சுதாகர்(30), சிறுமலை அகஸ்தியர்புரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சக்திவேல் (23) ஆகியோரைக் கைது செய்தனர். இந்நிலையில் கைதான 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அதற்கான உத்தரவை ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்துள்ளார்.