திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் சிலைகளை வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் சேதப்படுத்திச் சென்றனர்.
இக்கோயிலில் அய்யனார், சின்னகருப்பு, பெரியகருப்பு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் உள்ளன. இவை மண்ணால் செய்யப்பட்டவை. ஆவிச்சிபட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பலரும் இங்கு வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல பூஜை முடிந்த பிறகு பூசாரி கோயிலை பூட்டிச் சென்றுள்ளார்.
சனிக்கிழமை காலை கோயிலை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த சுமார் 25 மண்சிலைகளை மர்மநபர்கள் சேதப்படுத்திச் சென்றிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.