வத்தலகுண்டு அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பெண்கள் காயமடைந்ததை அடுத்து, மோதலில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
வத்தலகுண்டு அடுத்துள்ள நூத்துலாபுரம் கோவில்பட்டி கிராமத்தில், பொங்கல் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதே கிராமத்தில் இருவேறு இடங்களில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளுக்காக, இரு தரப்பிலும் ஒலி பெருக்கி மூலம் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. இதுதொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த தங்கமுத்து மற்றும் மதன்குமார் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அந்த பகுதியில் கல்வீச்சு சம்பவமும் நடந்தது.
இதில், நூத்துலாபுரம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (32) மற்றும் லட்சுமி (26) ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வத்தலகுண்டு போலீஸார் 15 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நூத்துலாபுரம் கோவில்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி (59), மதன்குமார் (30), சக்திவேல் (45), தங்கமுத்து (40), சுப்பிரமணி (32), அய்யாத்துரை (60), ஆண்டிச்சாமி (50) ஆகியோரைபோலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, நூத்துலாபுரம் கோவில்பட்டி கிராமத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.