ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கார் ஓட்டுநர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள வெள்ளியன்வலசு கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் தர்மராஜ் என்ற பரமசிவம் (34). இவர் சென்னையில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு வெள்ளியன்வலசையை சேர்ந்த உஷாராணி என்பவரை கொலை செய்ததாக அம்பிளிக்கை காவல் நிலையத்தில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்து விடும் என்று மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடந்த ஜூலை 6 ஆம் தேதி திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வந்தவர், தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் பூச்சிமருத்தை குடித்து உயிருக்கு போராடியுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார். இது குறித்து அம்பிளிக்கை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.