தமிழ்நாடு செயலர்கள் ஊராட்சி சங்கம் சார்பில் பெண் ஊராட்சி செயலர்களுக்கான செறிவூட்டல் பயிற்சி முகாம் கொடைக்கானல் அருகே பெருமாள்மலைப் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ தலைமை வகித்து பேசியது: தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலர்களில் பெண் ஊராட்சி செயலர்கள் 1,714 பேருக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 12 கட்டமாக நடைபெற உள்ள இந்த பயிற்சி முகாமில் முதற்கட்டமாக கொடைக்கானலில் 168 பேருக்கு புத்தாக்க பயிற்சி மற்றும் தன்னம்பிக்கை செறிவூட்டல் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் ராமநாதபுரம், திருநெல்வேலி, திருவாரூர், நாகபட்டினம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெண் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஊராட்சி செயலருக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க அரசானை வெளியிடப்பட்டதற்கும், பெண் ஊராட்சி செயலருக்கு மகப்பேறு விடுப்பு அறிவித்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவிப்பதோடு ஊராட்சி செயலர்களின் நிலுவை கோரிக்கையான கருவூலம் மூலம் ஊதியம் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
இந்த பயிற்சி வகுப்பை காந்திகிராம பேராசிரியர் குருவம்மாள் தொடங்கி வைத்து ஊராட்சி செயலர்களுக்கு விளக்க கையேடுகளை வழங்கி பேசியது: பெண்கள் தற்போது தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். மனதில் ஏற்படும் குழப்பங்களை அகற்றுவதோடு, மன அழுத்தத்தை போக்க வேண்டும். அப்போது தான் செய்ய வேண்டிய பணிகளில் வெற்றி பெற முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி பேராசிரியர் சரோஜினி, கொடைக்கானல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, முன்னாள் வட்டா வளர்ச்சி அலுவலர் அருள்சேகரன் மற்றும் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.