கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியில் வீடு மற்றும் தோட்டங்களை வியாழக்கிழமை இரவு காட்டு யானை சேதப்படுத்தியதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியிலுள்ள அஞ்சுவீடு, பாரதி அண்ணாநகர், பேத்துப்பாறை, வெள்ளப்பாறை உள்ளிட்ட பகுதிகளையொட்டியுள்ள வனப் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், காட்டு யானைகள் உணவைத் தேடி பேத்துப்பாறை பகுதியிலுள்ள விவசாயி செல்வக்குமார் தோட்டத்துக்குள் புகுந்துள்ளன. அங்கு விளைந்து வரும் பலா, கொய்யா மற்றும் பீன்ஸ், அவரை உள்ளிட்டவற்றையும் மற்றும் அங்கிருந்த வீட்டையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளன.
இது குறித்து விவசாயி செல்வக்குமார் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், வெள்ளிக்கிழமை வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். மேலும், யானையால் சேதமடைந்தவை குறித்தும், அதற்கான இழப்பீடு வழங்குவது குறித்தும் விவசாயியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கொடைக்கானல் வனப் பகுதிகளையொட்டியுள்ள நிலங்களில் காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால், விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, தனியார் தோட்டங்களை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டுவதற்கு, வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வனத் துறையினர் கூறியது: கொடைக்கானல் வனப் பகுதிகளில் காட்டு யானைகள் குட்டியுன் உலா வருகின்றன. இதனால்,. வனத்துறையினர் யானைகளையும், மனிதர்களையும் பாதுகாக்கும் வகையில், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யானைகள் தனியார் தோட்டத்துக்குள் புகும்போது அவற்றை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு தயாராக உள்ளோம் என்றனர்.