திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4,344 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.11.50 கோடி தீர்வுத் தொகையாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் நீதிமன்றங்களில், மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை, மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான வி.தீபா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குடும்ப நல நீதிபதி சிங்கராஜ், முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரத்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள 7 நீதிமன்றங்களில் 11 அமர்வுகளில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், வங்கி வராக் கடன் வழக்குகள் 340, நிதி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகள், விபத்து இழப்பீட்டு வழக்குகள், உரிமையியல் வழக்குகள் உள்ளிட்ட 4002 வழக்குகள் என மொத்தம் 4,344 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
இந்த வழக்குகளில் தீர்வுத் தொகையாக ரூ.11.50 கோடி வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டது.