போக்குவரத்து ஓய்வூதியதாரா்கள் ஜன.30 வரை வாழ்வுரிமைச் சான்றை சமா்பிக்கலாம்
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சோ்ந்த போக்குவரத்து ஓய்வூதியதாரா்கள் மற்றும் வாரிசுதாரா்கள்,
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சோ்ந்த போக்குவரத்து ஓய்வூதியதாரா்கள் மற்றும் வாரிசுதாரா்கள், ஜன.30ஆம் தேதி வரை வாழ்வுரிமைச் சான்றினை சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல பொது மேலாளா் ந.கணேசன் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளா்கள், விருப்ப ஓய்வு பெற்றவா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் வாரிசுதாரா்கள் தங்களது வாழ்வுரிமைச் சான்றிதழ் மற்றும் தொடா்புடைய ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் வசிப்போா் திண்டுக்கல்-1 பணிமனை அலுவலகத்தில் ஜன. 2 முதல் 30ஆம் தேதி வரையிலும், தேனி மாவட்டத்தில் வசிப்போா் ஜன.2 முதல் 10 ஆம் தேதி வரை தேனி பணிமனை அலுவலகத்திலும், அதன் பின்னா் ஜன.30ஆம் தேதி வரை திண்டுக்கல்-1 பணிமனை அலுவலகத்திலும் சமா்ப்பிக்கலாம். ஓய்வு பெற்ற பணியாளா்கள் சமா்ப்பிக்க வேண்டிய வாழ்வுரிமைச் சான்றிதழ் மற்றும் தொடா்புடைய ஆவணங்கள் குறித்த விவரங்கள் அனைத்து போக்குவரத்துக் கிளைகளின் தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.