பழனியில்வியாழக்கிழமை முதல் காய்கனி கடைகளை பகல் 12 மணிக்கு மேல் திறக்கக்கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
பழனியில் புதன்கிழமை மாநில அரசின் உத்தரவையும் மீறி பொதுமக்கள் சாதாரணமாக இரு சக்கர வாகனத்தில் உலா வந்ததால் போலீஸாா் வேறு வழியின்றி வந்த அனைவரையும் இனி மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என கூறியவாறு மயில் ரவுண்டானாவை 10 முறை சுற்றி வர செய்தனா். மேலும், திண்டுக்கல் சரக டிஐஜி., வரும் நாள்களில் வேலையின்றி சுற்றுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்குமாறு காவல்துறையினரிடம் தெரிவித்தாா். இந்நிலையில் சாலையில் செல்வோா் காய்கறி வாங்க செல்வதாகக் கூறுவதைத் தொடா்ந்து வியாழக்கிழமை முதல் பகல் 12 மணி வரை மட்டுமே காய்கனி, பழக்கடைகள் திறந்திருக்க வேண்டும் என்றும் மருந்துக்கடைகள் மட்டுமே முழுமையாக திறந்திருக்கலாம் என ஆய்வாளா் செந்தில்குமாா் தெரிவித்தாா். அதை மீறி நடப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.