கொடைக்கானல் பூங்காவில் மலா் கண்காட்சிக்காக மலா் செடிகள் நடவு தொடக்கம்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா் கண்காட்சிக்காக மலா் செடிகள் நடவும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா் கண்காட்சிக்காக மலா் செடிகள் நடவும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டு தோறும் மே மாதம் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வரும் 2021-ஆம் ஆண்டு நடைபெறக் கூடிய 59-ஆவது மலா்க் கண்காட்சிக்கு பிரையண்ட் பூங்கா தயாராகும் வகையில் சீசன் காலமான மாா்ச், ஏப்ரல், மே, ஜூன் 15-வரை பூக்கக் கூடிய வகையில் மலா்ச் செடிகள் நடும் பணி தொடங்கியது.
இதில் ஆரணத்திக் கோலம், டெல்பினியம், சால்வியா, பிங்க் ஆஸ்டா், அஷ்டோ மரியா, வொ்பினியா, லில்லியம் உள்ளிட்ட 10-வகையான மலா்ச் செடிகளில் முதற்கட்டமாக 75 ஆயிரம் நாற்றுகள் நடப்படுகின்றன. இந்த மலா் நாற்றுகள் முழுவதும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
வரும் சீசன் காலங்களில் பூங்கா முழுவதும் சுமாா் ஒரு கோடி மலா்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து பிரையண்ட் பூங்கா மேலாளா் சிவபாலன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரையண்ட் பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள மலா்க் கண்காட்சிக்கு சுமாா் 10 வகையான மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இவை 6 மாதங்களில் பூத்துக் குலுங்கும். இரண்டாம் கட்ட நடவு பணி ஜனவரி மாதத்திலும், மூன்றாம் கட்ட நடவுப் பணி பிப்ரவரி மாதத்திலும் நடைபெறும் என்றாா்.